Skip to content

Iththai Meethinil Vithakana – இத்தரைமீதினில் வித்தகனா

பல்லவி
இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த
உத்தமனே தோத்ரம்
அனுபல்லவி
நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்
சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது
சரணங்கள்
1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ
காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ
விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ
வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத்
2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே
ஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயே
உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே
உத்தம சத்திய முத்தே அதிபதியே- இத்
3.தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே
தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே
வானே யிருந்துபுவி வந்த பெரும் பதமே
மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே- இத்
4.வானாசனத்திருந்து மனுக்குலத்தை நினைந்து
தானாமனமுவந்து தாரணியில் பிறந்து
கோனாய் விளங்காநிற்கும் குருவேசுநாதனை நான்
ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண்- இத்
5.செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும்
நெஞ்சாசனத்தில் வைத்து நீடுழிவாழ்த்தல் வேணும்
பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதம் யாவும்
அஞ்சேன் அஞ்சேனே தேவதஞ்சம் கண்டதே போதும் – இத்